Pages

Wednesday, March 13, 2013

வடக்கின் சமர்...

வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இது இரு அணிகளும் மோதிக்கொள்ளும் 107ஆவது போட்டியாகும்.இலங்கையில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் மூன்றாவது மிகப் பழமையான மாபெரும் கிரிக்கெட் போட்டி இதுவாகும். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி... இதுவரை நடைபெற்ற 106 போட்டிகளில்,சென்.ஜோன்ஸ் கல்லூரி 33 போட்டிகளிலும்,யாழ் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளன.38 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையில் முடிவடைந்துள்ளன.1 போட்டி மழையினால் கைவிடப்பட்ட அதேவேளை,7போட்டிகள் முடிவுகளின்றியும் நிறைவடைந்துள்ளன. இம்முறை யாழ் மத்திய கல்லூரிக்கு பூபாலசிங்கம் டார்வினும்,சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு ஜெயக்குமார் அமிடஜனும் தலைமை வகிக்கின்றனர். யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி... இம்முறை பருவகாலத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 14 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன்,3 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையிலும் 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 7 போட்டிகளில் பங்குபற்றி 3 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளை வெற்றி தோல்வியற்ற நிலையிலும் முடித்துள்ளது. வழமைபோல் இம்முறையும் இரண்டு அணிகளின் பழைய மாணவர்கள் ஆதரவாளர்கள் அதிகம் பேர் போட்டிகளைக் காணவருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Tuesday, March 12, 2013

இரட்டைச் சதமடித்த வங்கப்புலி..

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் அணி சார்பாக முதல் இரட்டைச் சதமடித்த வீரராக வரலாற்று சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்.இலங்கையுடன் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலே இந்த அரிய சாதனையை அவர் நிலை நாட்டினார். 2005 ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முஷ்பிகுர் ரஹீம் தனது பதினேழாவது போட்டியில் முதல் சதத்தை 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக சிட்டஹொங்கில் பெற்றார்.இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் 31.91 என்ற சராசரியில் 1787 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதில் 9 அரைச் சதங்களும் அடங்கும். மிக இள வயதில் அணியின் உப தலைவரான முஷ்பிகுர் ரஹீம் 23 வயதில் அணித் தலைவரானார்.பின் வரிசையில் களமிறங்கும் இவர் தோற்றத்தில் உயரம் குறைந்தவராய் இருந்தாலும் விக்கெட்டுகளுக்கிடையே ஓட்டங்களை வேகமாய்ப் பெறக்கூடியவர்.அணியின் விக்கெட் காப்பாளராகவும் சிறப்பாக செயற்படுகிறார். இலங்கை அணிக்கெதிராக 13 போட்டிகளில் பகுபற்றியுள்ள பங்களாதேஷ் முஷ்பிகுர் ரஹீம் தலைமையில் முதன் முறையாய் தோல்வியைத் தவிர்த்து வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்றுள்ளது.இதற்கு ரஹீமின் அபாரமான துடுப்பாட்டமே காரணம். இள வயதில் பல போட்டிகளில் சாதித்த இவர் இன்னும் அதிகம் சாதிக்க வாழ்த்துகிறோம்.

Wednesday, March 6, 2013

இந்திய அணியின் NO:1 தலைவர் டோனி

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் அணித் தலைவர் என்ற பெருமை சௌரவ் கங்குலி வசமே இருந்தது.தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்று டோனி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகளைப் பெற்றிருந்தார்.டோனி 45 டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகளைப்பெற்று கங்குலியின் சாதனையைக் கடந்தார். T20 உலகக் கிண்ணம்,2011 உலகக் கிண்ணம்,ஐ.பி.எல் சம்பியன் பட்டம்,சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டம் என பல தொடர்களில் தனது தலைமையில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள டோனி.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணியை முதலிடத்துக்கு கொண்டு வந்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டோனியை நீக்க வேண்டும்.அணித் தலைமையை மாற்ற வேண்டுமென பலத்த விமர்சனங்கள் எழுந்த நேரத்தில் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதலிரு போட்டிகளிலும் அணியை வெற்றி பெற வைத்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அது மட்டுமன்றி துடுப்பாட்ட வீரராக தனது நிலையை உணர்ந்து முதல் போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.இந்த இரட்டைச் சதம் பல சாதனைகளுடன் கூடிய இரட்டைச் சதம்: *டெஸ்ட் போட்டியில் அதிக(224)ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணித் தலைவர். *டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த விக்கெட் காப்பாளர் வரிசையில் மூன்றாமிடம்.முதலிரண்டு இடங்களில் சிம்பாப்வேயின் அண்டி பிளவர்(224)இலங்கையின் சங்ககரா(230) *அவுஸ்ரேலியாவுக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற விக்கெட் காப்பாளர் வரிசையில் முதலிடம். டோனியின் இந்த இரட்டைச் சத சாதனையும்,அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற சிறந்த தலைவர் என்ற பெருமையும் இந்திய கிரிக்கெட்டிற்கு தற்போது சிறப்பென்றே சொல்லலாம். டோனியின் பக்கம் வீசும் அதிஷ்டக் காற்று இன்னும் சில வருடங்கள் தொடரும் போலே உள்ளது.வாழ்த்துக்கள் டோனி....

Friday, February 8, 2013

சச்சின்,81

கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் முதல் தரப் போட்டிகளிலும் தனது சாதனைகளைத் தொடர்கிறார். சச்சின்,முதல் தர போட்டிகளில் 81ஆவது சதம் அடித்து,முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.சர்வதேச அளவில் முதல்தர போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ் (834 போட்டி - 199 சதம்) முதலிடத்தில் உள்ளார்.
303 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையைப் படைத்துள்ள சச்சின் 25000 ஓட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.1988 ஆம் ஆண்டு மும்பை, வான்கடே மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிரான முதல் தர போட்டியில்,முதன்முதலில் சதம் அடித்த சச்சின், இப்போது அதே மைதானத்தில் 81ஆவது சதத்தை அடித்துள்ளமை சிறப்பென்றே சொல்லலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (51)ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் (49)என சர்வதேச போட்டிகளில் மொத்தம் நூறு சதங்களைப் பெற்ற வீரராகத் திகழும் சச்சின் இன்னும் சாதிப்பார்.சச்சினின் சாதனைகளை இனி வரும் காலங்களில் முறியடிப்பது கடினமே.

Saturday, December 29, 2012

கிரிக்கெட்டின் குரல் ஓய்ந்தது...


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டொனி கிரெய்க் தனது 66ஆவது வயதில் இன்று காலமானார்.சில மாதங்களுக்கு முன்னர் நுரையீரல் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார்.  

1946 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த டொனி கிரெய்க்,தனது முதலாவது சர்வதேச போட்டியில் இங்கிலாந்து சார்பாக 1972ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடினார்.
தனது அறிமுகப் போட்டியின் முதல் இனிங்சில் 57 ஒட்டங்களையும் இரண்டாம் இனிங்சில் 62 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்ட இவர்  அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வீரரொருவர் இரண்டு இனிங்சிலும் பெற்றுக் கொண்ட அதிக ஓட்டங்களாகவும் அது அமைந்தது.அது மட்டுமன்றி அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தனது திறமையை கிரிக்கெட் உலகுக்கு வெளிக்காட்டி இங்கிலாந்தையும்  அந்தப் போட்டியில் அபார  வெற்றி பெற வைத்தார். 
1970 களின் நடுப்பகுதியில் இவரது சகலதுறை ஆற்றல் காரணமாய் இங்கிலாந்து பல வெற்றிகளைப் பெற்றது.

1973 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக இந்தியாவில்  நடைபெற்ற போட்டியில் கன்னி (148) சதத்தைப் பெற்றார்.

 1974 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டத்தில் சாதிக்கத் தவறிய இவர்,பந்துவீச்சில் அசத்தினார்.முதல் இனிங்சில்  86 ஓட்டங்களைக் கொடுத்து  8 விக்கெட்டுகளையும் இரண்டாம் இனிங்சில் 70 ஓட்டங்களைக் கொடுத்து  5 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினார்.இவரின் துல்லியமான பந்துவீச்சில் சரிந்த  மேற்கிந்தியத்தீவுகள் 26 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

1972 - 1977 வரையான காலப் பகுதியில் 58 டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்களுடன் 3599 ஓட்டங்களையும் 141 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள   டொனி கிரெய்க்,22 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 269 ஒட்டங்களைப் பெற்றுள்ளதோடு  19 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

1975 ஆண்டு விஸ்டனின் சிறந்த வீரராகவும் தெரிவானார்.
ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி சர்வதேச அளவில் பல கோடிக்கணக்கான கிரிகெட் ரசிகர்கள் மனதில் தனது தனித்துவமான சிறப்பான  கிரிக்கெட் வர்ணனையால் இடம்பிடித்துக் கொண்டார் டொனி கிரெய்க்.
சில போட்டிகளைப் பார்க்கும்போது சலிப்பாக இருந்தாலும் இவரின் தனித்துவமான கம்பீரமான  வர்ணனைக்காக பல போட்டிகளைக் பார்த்திருக்கிறோம்.போட்டிகள் ஆரம்பிக்கும்போது நாணய சுழற்சிக்காக இவர் ஆடுகளத்தில் இறங்கினால் ரசிகர்களின் உற்சாகம் வானைப் பிளக்கும்.

ஒரு தலை சிறந்த கிரிக்கெட் வீரனை,வர்ணனையாளரை இன்று கிரிக்கெட் உலகம் இழந்துள்ளது.டொனி கிரெய்க்கின் இடத்தை யாராலும் நிரப்பவோ நெருங்கவோ முடியாது.டொனி கிரெய்க் எம்மை விட்டுச்சென்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளங்களில் என்றும் அவர் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
தன்னலமற்ற ஒரு சிறந்த மனிதரை அதுவும் யாழ் மண்ணிலே கடைசியாக கடந்த வருடம் சந்திக்க முடிந்தது எனக்கு என்றுமே ஒரு மறக்கமுடியாத  நாளாகவே அமைந்தது. 

Thursday, November 1, 2012


                    ஆடுகளத்திற்கு விடை கொடுத்தார்  சைமன் டாபெல்


சர்வதேச கிரிக்கெட்டுலகில் பல நடுவர்கள் உருவாகினாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடிப்பர்.அப்படிப்பட்ட நடுவர்களிலொருவர் சைமன் டாபெல்(Simon Taufel).ஆடுகளத்தில் துணிகரமாக வழங்கும் சரியான தீர்ப்புகள்,ஆடுகளத்தில் கோபப்படாமல் சிரித்த முகத்துடன் நடு நிலைமை வகிப்பது என்பன இவருக்கேயுரிய தனிச் சிறப்பு.இவையே கிரிக்கெட் ரசிகர்கள் இவர் மீது அதிக மதிப்பைக் கொண்டுள்ளமைக்கான காரணமெனலாம்.கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு வீரர்களிடத்திலும் அதிக மரியாதையைப்  பெற்ற நடுவர் டாபெல் என்றும் கூறலாம்.

உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான  அவுஸ்ரேலியாவின் சைமன் டாபெல் கடந்த 7ஆம் திகதி நிறைவடைந்த T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டுலகில் நடுவர் பணிக்கு விடை கொடுத்தார்.

41 வயதான டாபெல் தனது 27ஆவது வயதில் 1999 ஆம் ஆண்டு சிட்னியில்  அவுஸ்ரேலிய-இலங்கை அணிகளுக்கிடையேயான ஒருநாள் சர்வதேச தொடரில் நடுவராக அறிமுகமானார்.2000ஆம் ஆண்டு பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில்(அவுஸ்ரேலிய - மேற்கிந்தியத் தீவுகள்) மெல்பேர்னில் தனது முதல் டெஸ்ட் நடுவர் பொறுப்பை ஏற்றார்.2007 ஆம் ஆண்டு கென்ய,நியூசிலாந்து  அணிகளுக்கிடையே தென்னாபிரிக்காவின் டேர்பனில் நடைபெற்ற T 20 போட்டியே இவர் நடுவராக செயற்பட் முதல் T20 போட்டி.

13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் 74 டெஸ்ட்,174 ஒரு நாள் சர்வதேச போட்டிகள்,34 T20 போட்டிகளில் நடுவராக செயற்பட்டிருக்கிறார். 2004 முதல் 2008 வரை தொடர்ந்து 5 முறை சர்வதேச கிரிகெட் பேரவையின் சிறந்த நடுவருக்கான விருதை பெற்றிருக்கிறார். இது அவரது நடு நிலைமைக்குக் கிடைத்த உயரிய கௌரவம்.

2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடந்த T20  உலகக்கிண்ண தொடர்களிலும் 2004 ஆம் ஆண்டு ஐ.சி.சி யின் சாம்பியன் கிண்ண இறுதிப் போட்டியிலும் நடுவராக செயற்பட்டுள்ளார்.

சிட்னியில் சிறந்த பாடசாலை  கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த டாபெல் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்தார்.ஆனால் இவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.இவருக்கு ஏற்பட்ட முதுகு வலி இவரது கிரிக்கெட் கனவை தகர்த்தது.கிரிக்கெட் விளையாட்டை தொடர முடியாமல் இளம் வயதிலேயே நடுவராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.மைக்கல் ஸ்லேட்டர்,அடம் கில்கிறிஸ்ட் உட்பட்ட முன்னணி வீரர்களுடன் அவுஸ்ரேலிய பிராந்திய அணிகளில்  விளையாடியுள்ளார்.
 சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  சிறந்த நடுவர் குழுவில் (எலைட் பேனல்) இடம் பெற்றிருந்த சைமன் டாபெல் நடுவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.சி.சி புதிதாக உருவாக்கியுள்ள ஐ.சி.சி நடுவர் பயிற்சிக்குழுவில் நடுவர் செயற்திறன் மற்றும் பயிற்சி முகாமையாளராக செயலாற்றவுள்ளார்.

தன் கிரிக்கெட் வாழ்கையில் சிறந்த முடிவுகளை வழங்கிய இவர் தனது தனிப்பட்ட  வாழ்க்கையிலும் சரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்.இவரைப் போன்ற சிறந்த நடுவர்களை இனி ஆடுகளங்களில் நமக்குக் காணக் கிடைப்பது அரிதாகவே இருக்கும்.

வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைப்போம்..

Thursday, September 20, 2012

                                          
                                      T20 திருவிழா

 20 - 20 போட்டிகள் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது அதுவும் உலகக் கிண்ணப் போட்டிகள் என்றால் இன்னும் விறுவிறுப்பாய்  இருக்கும்.நான்காவது  T20 உலகக்கிண்ண  கிரிக்கெட் போட்டிகள்  இம்மாதம் 18 ஆம் திகதி முதல் அக்டோபர் 7ஆம் திகதி  வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இதில் 12 நாடுகள் பங்கேற்கின்றன.முதன்முறையாய் ஆசிய நாடொன்றில் இடம்பெறும் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் என்ற பெருமை இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்குண்டு.அந்தப் பெருமை நம் நாட்டிற்குக் கிடைத்தமை இலங்கை ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியே.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று இலங்கையில் நடைபெறுவது இதுவே முதற்தடவை.முதன் முறையாய் இலங்கையில் அனைத்துப் போட்டிகளும் இடம்பெறவுள்ளது.அதுவும் ஆடவர்,மகளிர் T20 உலகக்கிண்ண    போட்டிகள் ஒரே நாட்டில் நடைபெறுவது இன்னும் சிறப்பு.


 2007ஆம் ஆண்டு,T20 உலக உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தென்னாபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது T20 உலகக்கிண்ணத்தை,பாகிஸ்தானைத் தோற்கடித்து வென்றது.2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 2ஆவது T20 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து பாகிஸ்தானும்,2010ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த 3ஆவது உலகக்கிண்ண போட்டியில்  அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்தும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றின.


இம்முறை போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு  அணிகள்
A        இந்தியா,இங்கிலாந்து,ஆப்கானிஸ்தான்.
B       அவுஸ்திரேலியா,மேற்கிந்தியத்தீவுகள்,அயர்லாந்து.
C       இலங்கை,தென்னாபிரிக்கா, சிம்பாபே.
D     பாகிஸ்தான், நியூசிலாந்து,பங்களாதேஷ்.

குழு நிலைப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

 இலங்கை
மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அணியில் புதுமுக வீரர்களாக 19 வயது சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய,ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டில்ஷான் முனவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் SLPL போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால்,உலகக்கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.உபாதை காரணமாக கடந்த 7 மாதமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிசும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியாவுடனான ஒருநாள் தொடரின்போது காயமடைந்த சங்ககாரா,நுவன் குலசேகர ஆகியோர் உடற் தகுதியோடு மீண்டும் அணியில் இடம்பெறுவது இலங்கைக்கு பலமே.திசர பெரேரா,அஞ்சலோ மத்தியுஸ்,ஜீவன் மென்டிஸ் ஆகிய சகலதுறை வீரர்கள் எதிரணிக்கு சவால் விடுவார்கள்.வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்க எதிரணியை நிலை குலைய வைத்தால் குறைவான ஓட்டங்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த முடியும்.ஆனால் அண்மைக் காலமாக இவரது பந்து வீச்சு ஓவரில் எதிரணி அதிக ஓட்டங்களைக் குவிக்கிறது.லஹிரு திரிமானே  தினேஷ் சந்திமால் ஆகியோர் மத்திய வரிசையில் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.டில்ஷான் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக  களமிறங்கி அதிரடியாய் ஓட்டங்களைப் பெற வேண்டும்.சொந்த நாட்டில் அதிகம் பரீட்சயமான மைதானங்களில் விளையாடுவதால் அதிகம் சாதிக்கலாம்.   

 பாகிஸ்தான்
T20  உலகக்கிண்ண பாகிஸ்தான் அணி  திறமை வாய்ந்தது.இம்ரான் நசிர்,அப்துல் ரசாக் கம்ரன் -உமர் அக்மல் சகோதரர்கள் ஆகியோர் ஆட்டத்தின் தன்மையை மாற்றக் கூடியவர்கள்.அணித் தலைவர் முஹட் ஹபீசின் சகலதுறை ஆட்டம் அணிக்கு திருப்புமுனையாக இருக்கும்.அஃப்ரீடியின் ஆட்டம் சூடு பிடித்தால் எதிரணியின் நிலைமை கவலைக்கிடம்.சரிவை எதிர்நோக்கும் அணியை மீட்டு,வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய திறமை படைத்தவர்அப்துல் ரசாக்.வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் குல்,சொஹைல் தன்வீர்,அப்துல் ரசாக்,சுழற்பந்து வீச்சாளர்கள் அஃப்ரீடி,அஜ்மல்,என்று தரமான பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எதிரணிக்கு சிக்கல் இருக்கும்.மனம் வைத்து விளையாடினால் பாகிஸ்தான் அதிகம் சாதிக்கலாம்.
  நியூசிலாந்து
ரோஸ் ரெய்லர்  தலைமையில் நியூசிலாந்து களமிறங்குகிறது.அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கலமும்,ரோஸ் ரெய்லரும் அணியின் பலங்கள்.சகலதுறை வீரர்களான,ஜேகப் ஓரம்,ஜேம்ஸ் பிராங்ளின் ஆகியோரின் சகலதுறை ஆட்டமும் கைல் மில்ஸ்,டிம் சௌதி ஆகியோரின் வேகமும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கும்.அனுபவ வீரரான வெட்டோரியின் சுழற்பந்தில் அதிக விக்கெட்டுகள் வீழுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.மார்டின் கப்தில்,வில்லியம்ஸன் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து விளையாடினால் அதிக ஓட்டங்களைப் பெறலாம்.எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் அணியாக மாறும் நியூசிலாந்து.

மேற்கிந்தியத்தீவுகள்
டரன் சமியின் தலைமைத்துவத்தில் இறுதிவரை முன்னேறும் அணியாக எதிர்பார்க்கப்படுகிறது.அதிரடி மன்னன் கிரிஸ் கெய்ல்,இம்முறை அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்.இவரது அதிரடியை நினைத்தே இப்போதே பல அணிகள் கலங்கிப் போயுள்ளன.கெய்ரன் போலார்ட்,டுவைன் ஸ்மித்,மார்லன் சாமுவெல்ஸ்,டரன் பிராவோ,ஆண்ட்ரே ரசல் ஆகியோரின் சகலதுறை ஆட்டம்அணிக்கு முக்கிய பலம்.சுனில் நரைனின் சுழல் பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைக்கும் என்றே தோன்றுகிறது.சகலதுறை வீரர்கள் பலர் அணியில் இருப்பதால் இந்த அணி அரை இறுதி வரை முன்னேறும்.  
 
  தென்னாபிரிக்கா
அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய வீரர்களிலொருவர் ஹஷிம் அம்லா.அண்மைக்காலமாக டெஸ்ட்,ஒருநாள்,T20 கிரிக்கெட்டில் அபார திறமையை வெளிக்காட்டி வருகிறார்.அணியின் வெற்றி தோல்விகளை தனி நபராகத் தீர்மானிக்கும் இன்னொருவர் ஜாக் கலிஸ்.இவரது அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டம் அணிக்குப் பலம் சேர்க்கும்.பந்துவீச்சிலும் இவர் கில்லாடி.
துடுப்பாட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் ஏ.பி.டீ.விலியர்ஸ்,டுமினி,ரிச்சர்ட் லீவி ஆகியோர் விரைவாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்கள்.இது அணிக்குக் கூடுதல் பலம்.வேகப்பந்துவீச்சாளர்கள் டேல் ஸ்டெய்ன்,மோர்னி மோர்கெல்,சொட்சொபே,வெய்ன் பார்னல் ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைப்பர்.சுழலில் ஜோஹன் போத்தா துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக விளங்குவாரென்றே எதிர்பார்க்கலாம்.சிறந்த துடுப்பாட்டம்,பந்து வீச்சு,களத்தடுப்பு என சகல துறைகளிலும் திறமையான அணியாகவே களமிறங்குகிறது தென்னாபிரிக்கா.

  இந்தியா
இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்.இந்திய அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் ஷேவாக்,கம்பிர்,விராத் ஹோலி,டோனி  இருப்பதால் அதிகம் சாதிக்கலாம்.புற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ள யுவராஜின் வருகை இந்தியாவுக்கு மேலதிக பலமே.மிகுந்த உற்சாகத்தோடு அதே அதிரடியை யுவராஜிடம் காண முடிகிறது.ரெய்னாவின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் வேண்டும்.இதைவிட இர்பான் பத்தான் இலங்கை ஆடுகளங்களில் அதிகம் சாதிக்கக் கூடிய வீரர்.இர்பான் பத்தான்,மனோஜ் திவாரி போன்ற சகலதுறை வீரர்களின் பங்களிப்பு சிறப்பாய் இருந்தால் அணி முன்னோக்கி செல்வது இலகு.வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீர் கான்,லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோர் இலங்கை ஆடுகளங்களில் திறமையை நீருபிப்பர்.ஹர்பஜன் சிங் நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு வந்தாலும் அஷ்வினை டோனி அதிகம் நம்பியுள்ளதால் இறுதி அணியில் ஹர்பஜன் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்பது கேள்விக்குறியே.


  இங்கிலாந்து
இங்கிலாந்து அணி ஸ்டூவர்ட் ப்ரோட் தலைமையில் களமிறங்குகின்றது.அதிரடி வீரரான கெவின் பீட்டர்சன் அணியிலில்லை.கடந்த 2010ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை  இங்கிலாந்து கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் பீட்டர்சன்.தொடர்நாயகன் விருதும் பெற்றிருந்தார்.இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவரான ஸ்ட்ராசை விமர்சித்து,தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ் சர்ச்சையால் தேர்வுக்குழுவினர் உலகக்கிண்ண அணியில் பீட்டர்சனை சேர்க்கவில்லை.கடந்த முறை இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை  வென்றபோது,அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் தற்போதைய அணியிலும் உள்ளனர்.எனினும் T20  போட்டிகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு ஆணிவேராக விளங்கிவந்த பீட்டர்சன் உலகக்கிண்ண அணியில் இல்லாமை அந்த அணியின் வெற்றியைப் பாதிக்கலாம்.பந்து வீச்சில் கிரேம் ஸ்வானின் சுழல் இங்கிலாந்துக்குக் கைகொடுக்கும்.டிம் பிரெஸ்னன்,ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் அசத்துவர்.அது மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் இறுதிக் கட்டத்தில் ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலு சேர்ப்பார்கள்.லூக் ரைட்,கிரேக் கீஸ் வெட்டர்,ரவி போபார,மோர்கன் போன்ற வீரர்கள் இருந்தாலும் இவர்கள் துடுப்பாட்டத்தில் சாதிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

 அவுஸ்ரேலியா
இம்முறை அவுஸ்திரேலிய அணி அனுபவம் குறைந்த வீரரான ஜோர்ஜ்  பெய்லி தலைமையில் களமிறங்குகின்றது.அண்மைக் கால தோல்விகளால் தரவரிசையிலும் பின் நோக்கி நகர்ந்துள்ள அவுஸ்திரேலிய அணியில் அதிக வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெமரூன் வைட் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.டானியல் கிரிஸ்டியன்,மைக்கல் - டேவிட் ஹசி சகோதரர்களின்  பொறுப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கியம்.டேவிட் வோர்னர்,ஷேன் வாட்சன் ஆகியோரின் அதிரடியை அதிகம் நம்பியுள்ளது அவுஸ்திரேலியா.இவர்களது இணைப்பாட்டத்தை எதிரணி விரைவாக தகர்த்தால் எதிரணியின் வெற்றி வாய்ப்பு சுலபமாகும். 41வயதுடைய பிரட் ஹொக் அணியில் இருப்பது அணிக்கு சாதகமே.இளம்,அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியிலிருப்பது ஆரோக்கியமாக இருக்கும்.


பங்களாதேஷ்
முஷ்பிகுர் ரகீம் தலைமையில் களமிறங்கும் பங்களாதேஷ்,அதிக அனுபவமில்லாத அணியென்று சொல்லப்பட்டாலும் அதிரடியாய் விளையாடும்.இந்த அணியில் துடுப்பாட்டத்தில் அதிகம் சாதிக்கத் தவறும் அஷ்ரபுல் இன்னும் அணிக்குள் இருப்பது மாயமே.அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலின் அதிரடி தொடர்ந்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கையும் அதிகரிக்கும்.ஷாகிப் அல் ஹசன் சகல துறை வீரராக சாதிப்பார்.அதிரடியாய் ஆடக் கூடிய பல வீரர்கள் இருந்தாலும் இவர்கள் அவசரப்படாமல் நிதானமாய் விளையாடினால் எதிரணிக்கு சிக்கலைக் கொடுக்கலாம்.

சிம்பாபே
சிம்பாப்வே அணி பிரெண்டன் ரெய்லர் தலைமையில் களம் காண்கிறது.எல்டன் சிக்கும்புரா,ஹமில்டன் மசகட்சா,பிரெண்டன் ரெய்லர் போன்ற வீரர்கள் துடுபாட்டத்தில் அணிக்குப் பலமாய் இருப்பர்.உட்செயா,ரேய் ப்ரைஸ்,மற்றும் ஏனைய வீரர்களின் பங்களிப்புடன் விக்கெட் வேட்டை தொடரும்.முதல் T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பலர் விளையாடுவதால் அழுத்தங்கள் அதிகம்.அதிக சவாலை எதிர்கொள்ளவேண்டி வரும்.

அயர்லாந்து
வில்லியம் போர்ட்டர் பீல்ட் தலைமையில் களம் காணும் அணி அயர்லாந்து.எட் ஜோய்ஸ்,கெவின் ஒ பிரைன்,ரங்கின்,ட்ரென்ட் ஜோன்ஸ்டன் ஆகியோர் அனுபவ வீரர்கள்.இந்த அணி பலம் பொருந்திய அணிகளுக்கு சவால் விடும் அணியாக மாறும் என்றே தோன்றுகிறது.

ஆப்கானிஸ்தான்

நவ்ரொஸ் மங்கல் தலைமையிலான  ஆப்கானிஸ்தானில் அதிகம் அறிமுகமில்லாத வீரர்கள் உள்ளனர்.இந்த உலகக் கிண்ணத் தொடர்தான் மூன்று வீரர்களுக்கு அறிமுகப் போட்டிகளாக அமையவுள்ளது.இவர்கள் சாதிப்பார்களா என்பதே கேள்விக்குறி.பயிற்சிப் போட்டியில் இலங்கை A அணியைத் தோற்கடித்துள்ளது.ஓட்டங்களை வேகமாகக் குவிக்க முனைப்புக் காட்டும் வீரர்களின் தன்னம்பிக்கை சிறப்பானதே. 

 இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் பெரும்பாலும் இந்தியா,இங்கிலாந்து அவுஸ்ரேலியா,மேற்கிந்தியத்தீவுகள்,இலங்கை,தென்னாபிரிக்கா,பாகிஸ்தான்,நியூசிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.ஆப்கானிஸ்தான்,அயர்லாந்து,சிம்பாபே, பங்களாதேஷ் அணிகள் T20 போட்டிகளில் அனுபவம் குறைந்த அணிகளாகத் தென்பட்டாலும் அண்மைக் கால இவர்களது பயிற்சிகள் எதிரணிகளுக்கு கடும் சவாலைக் கொடுக்கும் என்றே தோன்றுகிறது.
பன்னிரண்டு அணிகளும் அட்டகாசமாய் அசத்தக் காத்திருக்கின்றன.விறுவிறுப்பான போட்டிகள் இனி கிரிக்கெட் ரசிகர்களைப் பரவசப்படுத்தப்போகிறது.கிரிக்கெட் கொண்டாட்டத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.பல அதிர்ச்சிகள்,ஆச்சரியங்கள் இம்முறையும் அரங்கேறும்.


 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates