Pages

Sunday, May 31, 2009


" சறுக்கிய நடப்புச் சம்பியன்கள் "

களிமண் தரை டென்னிஸ் போட்டிகளில் ராஜாவாகத் திகழும் ரபேல் நடால் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் 4ஆவது சுற்றுடன் வெளியேறினார்
தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங் மூன்றரை மணி நேரம் போராடி 6-2, 6-7 (2-7), 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் நடாலை வீழ்த்தினார்.
தொடர்ந்து 4முறை பிரெஞ்ச் சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ள நடால் தொடர்ந்து 31 ஆட்டங்களில் வென்று சாதனை படைத்தார்.
இப்போது இவரின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி.
நடாலின் தோல்வியால் ரோஜர் ஃபெடரருக்கு பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் வெல்லும் வாய்ப்பு (எனது பார்வையில்) அதிகரித்துள்ளது. இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளபெடரர், பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் வெல்லாதது எட்டாக் கனியே.இப்போது கனி கைக்கு அருகில் ரோஜர் ஃபெடரா!
மகளிர் பிரிவில் 4ஆவது சுற்றுடன் நடப்புச் சம்பியன் அனா இவானோவிக்கும் கண்ணீருடன் வீட்டுப் புறப்படார். இவர் 2-6, 3-6 என்ற நேர் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அசாரென்காவிடம் தோல்வியுற்றார்.
"ஆனைக்கும் அடி சறுக்கும் இதுதானோ"
11 மனைவிகள் 21 குழந்தைகளுக்கு சொந்தக்காரன்
அமெரிக்காவில் 29 வயது வாலிபர் ஒருவர் 11 மனைவிகளின் மூலம் 21 குழந்தைகள் பெற்று அதிர வைத்துள்ளார்.இந்தவாலிபர் (இல்லை கில்லாடி ) டெஸ்மாண்ட் ஹாட்செட். இவருக்கு இரண்டு முறை ஒரே ஆண்டில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இவரது மூத்த குழந்தைக்கு 11 வயதாகிறது. கடைசி குழந்தைக்கு 11 மாதம் மட்டுமே ஆகிறது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருவதால் இவரால் அனைத்து குழந்தைகளையும் பராமரிக்க முடியவில்லை.
இதையடுத்து அவரது மனைவிகளில் சிலர் நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் தான் இவருக்கு 21 குழந்தைகள் இருக்கும் செய்தி வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
நான் சாதனை எதையும் படைக்க விரும்பவில்லை,இனி குழந்தை பெற்று கொள்ள மாட்டேன்,நான் வேண்டுமென்று இதை செய்யவில்லை,எனது ஒவ்வொரு மனைவிக்கும் எனக்கு மேலும் சில குழந்தைகள் இருப்பது தெரியும்.எனது 21 குழந்தைகளின் பெயர், வயது மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றை என்னால் மறக்காமல் சொல்ல முடியும் என்கிறார் இந்த சாதனைக் கில்லாடி............
"கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா ராஜா......... "

Saturday, May 30, 2009

தென்னாபிரிக்காவில் நடந்த ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தற்போது 20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீது திரும்பியுள்ளது. ஐ.சி.சி.20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 5 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 12 நாடுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன.
ஏ- பிரிவு- இந்தியா, பங்களாதேஷ்,அயர்லாந்து
பி- பிரிவு- இங்கிலாந்து, பாகிஸ்தான்,நெதர்லாந்து
சி- பிரிவு- இலங்கை, அவுஸ்ரேலியா, மேற்கிந்தியத்‌தீவுகள்
டி- பிரிவு- தென்னாபிரிக்கா, நியூசிலாந்து,ஸ்கொட்லாந்து
"லீக்"போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் "சூப்பர் 8" சுற்றுக்குத் தகுதி பெறும்.
"சூப்பர் 8" சுற்றில் தகுதி பெறும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெறும்.
20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆபிரிக்காவில் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்தப் போட்டிகள் 216 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறுகிறது ஐ.சி.சி.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்... கொண்டாடுங்கோ....

Friday, May 29, 2009

சானியாவுக்கு விரைவில் டும்.. டும்..
டென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். கடந்த 2005-ம் ஆண்டு நடந்த அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து குறுகிய காலத்தில் உலகம் முழுவதிலும் பிரபலமானார். இதையடுத்து சானியா மிர்சாவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.
அவர் டென்னிஸ் ஆடும் மைதானங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏன் தொலைக்காட்சிகளிலும் இவரது டென்னிஸ் ஆட்டத்தைப் பலரும்
கண்டு ரசித்தனர். ஒருபுறம் புகழின் உச்சிக்கு சென்ற சானியாமிர்சா மறுபுறம் மத ரீதியான சர்ச்சைகளுக்கும் உள்ளானார். ஆனால் விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு டென்னிஸ் களத்தில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மகேஷ்பூபதியுடன் இணைந்து அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்தார்.
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு விரைவில் திருமணமாம்.மாபிள்ளை சானியாமிர்சாவுடன் சிறு வயது முதலே படித்த சோரப்மிர்சா. சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
சானியா டென்னிசுக்கு முழுக்குப் போடுவாரா.......

Thursday, May 28, 2009

மண் கவ்விய மான்செஸ்டர் யுனைடெட்

முன்னணி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழக அணிகள் பங்கேற்கும் யு.ஈ.எப்.ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது. இதில் 2008ம் ஆண்டு சாம்பியன் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதின.

பார்சிலோனா அணி மூன்றாவது முறையாக சாதித்தது. பரபரப்பான இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.கிறிஸ்டியனோ ரொனால்டோ, ரூனிபோன்ற முன்னணி வீரர்கள் இருந்தபோதும் மான்செஸ்டர் அணி ஏமாற்றத்தையே சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி இத்தொடரில் மூன்றாவது முறையாக (1992,2006,2009) சாம்பியன் ஆனது.

Wednesday, May 27, 2009

வயசு 32
லங்கை அணிக்குக் கிடைத்த சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேல ஜெயவர்தன.டெஸ்ட் கிரிக்கெட்,ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.இன்று இவருக்கு பிறந்த நாள்.
102 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8251ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.25 சதங்கள்.32 அரைச்சதங்கள்.142 பிடிகள். 3 வது விக்கெட்டுக்காக குமார் சங்கக்கராவுடன் இணைந்து 624ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.இது ஒரு உலக சாதனை ஆகும். 299ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 8042ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.10சதங்கள்,49 அரைச் சதங்கள்.159பிடிகள்.
கடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மகேல தலைமையில் இலங்கை அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துக் கொண்டது.பல போட்டிகளில் இலங்கை அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த சாதனை வீரன் மகேல.

வாழ்த்துக்கள் மகேல......
நல்லா வால் பிடிக்கிறாங்க

குதிரைக்கு வால் இருக்கும் பார்த்திருக்கிறோம். ஆனால் இவ்வளவு நீளமான வால் உள்ள குதிரையா? என்ன குழப்பமா?இந்தக் குதிரையப் பாருங்க.இல்லை இந்தக் குதிரையின் வாலைப் பாருங்க. பார்த்தீங்களா? இந்தக் குதிரைதான் மிக நீளமான வாலுள்ள குதிரை......




Monday, May 25, 2009

சொல்லி அடிச்ச கில்லி
தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நிறைவு பெற்றது. கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இந்த முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை, டில்லி, ராஜஸ்தான் அணிகள் சாதிக்கத் தவறின.
இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல். தொடரில் கடைசி இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இந்த முறை சாம்பியன் பட்டம் வென்று அதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அணியின் தலைவரான அடம் கில்கிறிஸ்ட் தான். அதிரடியில் மிரட்டிய இவர், அணியை சிறப்பாக வழிநடத்திய பெருமையினையும் தனதாக்கினார்.

இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை எடுத்தது.144 ஓட்டங்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் கடுமையாகப் போராடி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.இதனால் 6ஓட்டங்களால் டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றிபெற்றது.
போட்டியின் நாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவரான அணில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார்.
போட்டித் தொடரின் நாயகனாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தலைவரான அடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
இத்தொடரில் 3 அரைச் சதம் உட்பட 495 ஓட்டங்களைக் குவித்த இவர், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதில் 29 சிக்சர்களும் அடங்கும்.
பெயரில் மட்டுமன்றி சாதித்தும் காட்டினார் கில்லி....

Saturday, May 23, 2009


"பட்டம் யாருக்கு"






கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை ஆரம்பமாகிறது. ஜூன் 7-ம்தேதி வரை நடைபெற உள்ள இப் போட்டியில் முன்னணி வீர,வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

ஆடவர் பிரிவு::: தர வரிசையில் முதலாம் இடத்திலும் நடப்பு சம்பியனாகவும் திகழும் ஸ்பெயினின் ரஃபேல் நடால்,முன்னாள் உலகின் நம்பர்-1 வீரரான சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர் இடையே கடும் போட்டி நிலவப்போகிறது.தொடர்ந்து 4முறை பிரெஞ்ச் சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ள நடால், 5 வது முறையாக சாதிக்க உள்ளார்.பிரெஞ்ச் பகிரங்க தொடரில் இதுவரை, நடால், சுவீடனின் ஜோர்ன் போர்க் ஆகியோர் தலா 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

களிமண் தரை போட்டிகளில் ராஜாவாகத் திகழும் நடாலுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வீரராக வலம் வருகிறார் பெடரர். இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளபெடரர், பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் வெல்லாதது பெரும் ஏமாற்றம் தான். கடந்த 2006, 2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் பகிரங்க இறுதி வரை முன்னேறிய பெடரர், நடாலிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.அவுஸ்ரேலிய,விம்பிள்டன்,அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் ஃபெடரருக்கு, பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் மட்டும் கானல் நீராக இருந்து வருகிறது.

இவர்களை தவிர செர்பியாவின் ஜோகோவிக்,ஸ்பெயினின் டேவிட்பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் ஆகியோரும் பட்டத்துக்காக அணிவகுத்துள்ளனர். சில சமயம் முன்னணி நட்சத்திரங்கள் அடி சறுக்கலாம்.

மகளிர் பிரிவு:::நடப்பு சம்பியன் செர்பியாவின் அனா இவானோவிக், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ரஷியாவின் தினாரா சஃபினா உள்ளிட்ட முன்னிலை வீராங்கனைகள் களத்தில். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 10 மாதங்களாக விளையாடாமல் இருந்துவந்த ரஷியாவின் மரியா ஷரபோவாவும் சவாலுக்குத் தயார்.

நாளை முதல் விறுவிறுப்பான டென்னிஸ் தொடராக பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்.வெல்லப்போவது யார்?சக்தி எப். எம் கேளுங்கள்....

'ரொனால்(டோ)டினோ' க்கு அல்வா!!


பிரேசில் கால்பந்தாட்ட அணி என்றதும் நினைவுக்கு வரும் வீரர்கள் ரொனால்டோ, ரொனால்டினோ.ஆனால் இப்போது இவர்கள் அணிக்குள் இல்லை.

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும் கான்ஃபெடரேஷன் கிண்ணப் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களான ரொனால்டோ, ரொனால்டினோ ஆகியோர் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை.

ஜூன் 6ஆம் திகதி உருகுவே அணியையும் ஜூன் 10ஆம் திகதி பராகுவே அணியையும் சந்திக்கப்போகிறது பிரேசில்.

ரொனால்டோ,ரொனால்டினோ இருவரும் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடவில்லை என்பதால் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லையாம்.பிரேசில் அணியின் பல வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தவர்கள் இவர்கள்.

இனி எப்போது இவர்கள் களத்தில்...........

Friday, May 22, 2009

லூசிக்கு வந்த வினை

ஹாலிவுட் திரை உலகிற்கு இது ஒரு சோகமான செய்தி.......இங்கிலாந்தைச் சேர்ந்த லூசி கார்டன் பாரீஸில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். யார் இந்த லூசி....இது பலரது கேள்வி...இதற்கு விடை இதுதான்....... ஸ்பைடர்மேன் 3 படத்தில் ஒரு ரிப்போர்ட்டராக நடித்திருந்தார். இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்.....அவர் நடித்த காட்சிகள் உங்கள் கண்களுக்குள் ஓடிகொண்டிருக்கும்......அப்படித்தானே?

"லூசி" ஆரம்பத்தில் ஒருமாடல். 2001-ல் வெளியான 'பெர்ஃப்யூம்' அவரது அறிமுகப் படமானது. இதுவரை 12திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனது பிறந்த நாளுக்கு 2தினங்கள் இருக்கின்ற நிலையில் அவர் தற்கொலை புரிந்தமை ஹாலிவுட் சினி உலக ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. என்ன செய்வது விதியை யாரால் வெல்ல முடியும்?

ஹாலிவுட் சினியுலகம் நல்ல திறமையான ஒரு நடிகையை இழந்திருக்கிறது....................

Thursday, May 21, 2009

"குழப்படி எக்ஸ்பிரஸ் அவுட்"

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர். "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, போதை மருந்து பயன்படுத்துதல் போன்ற விவகாரங்களில் சிக்கி தனது பெயரை அடிக்கடி பேச வைத்தவர்.

சோயிப் அக்தர் அண்மைக்காலமாக சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.இம்மாதம் 21 முதல் 23 வரை நடைபெறும் பயிற்சிப் போட்டிகளில்விளையாடினால் அவரது உடற் தகுதி பற்றி இறுதி முடிவு எடுக்க முடியும் என பயிற்சியாளர் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அக்தர் தெரிவித்தார். இதன் காரணமாக அவரை 20-20 உலகக் கோப்பைக்கான அணியிலிருந்து விலக்கிக் கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அக்தருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ராவ் இப்திகார் அணியில் இடம்பெறக் கூடும். உடற்தகுதி அல்லது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 2007 டிசம்பருக்குப் பிறகு 6 ஒரு தின போட்டிகளில் மட்டுமே அக்தர் பங்கேற்றுள்ளார். மொத்தமே 5 விக்கெட் மட்டுமே எடுத்தார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் இம்முறை 20-20 உலகக் கோப்பை போட்டிகளில் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வேதனைதான்... எப்ப வருவார் அக்தர் ..........


::உங்கள் கையில் உலகம்::

ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் பொண்ணான மணித்துளிகள்.அப்படிப்பட்ட நேரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.நேரத்தை அறிந்து கொள்ள உருவானதே கடிகாரம்.கைக்கடிகாரத்தில் நேரத்துடன் திகதி,திசை இவற்றை அறிந்து கொள்ளலாம் என்பதே ஒரு அதிசயமான விடயமாக மாறியது.

இன்றைய நவீன காலகட்டத்தில் கைக்கடிகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அதிசயங்கள் தொடர்கின்றன.இப்போது இந்தக் கைக்கடிகாரங்களில் கையடக்கதொலைபேசி ப்ளூ டூத், ஐ பாட், கேமரா என பல வசதிகள்.

நேரம் பார்க்க கண்டுபிடிக்கப்பட கடிகாரங்களில் இப்படி இவ்வளவும் புகுந்து கொண்டால் நேரம் பார்க்க யாருக்கு மனம் இருக்கபோகிறது?இனி வரும் காலங்களில் என்னென்ன வரப்போகிறதோ............

இனி உங்கள் கையிலும் உலகம் வேகமாக அசையப்போகிறது....

Wednesday, May 20, 2009

"எட்டப்படாத இலக்கு"
தென்ஆப்ரிக்காவில் நடக்கும் ஐ.பி.எல். இருபது-20 தொடரில் அரையிறுதி வாய்பை இழந்து வெளியேறிய முதல் அணி கொல்கட்டா நைட்ரைடர்ஸ் இந்த அணி 14போட்டிகளில் விளையாடி 3போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு அடுத்து 2வது அணியாக மும்பை அணி அரையிறுதி வாய்ப்பை விட்டு வெளியேறி அதிர்ச்சியை தந்தது.பல சிறந்த வீரர்கள் இருந்தும் சிறப்பாக பிரகாசிக்க முடியவில்லை.
இந்த அணிகளுக்கு பிறகு கடந்த முறை ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த முறை அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் போனது. 14 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான், 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 13 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த முறை ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த முறை அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் போனது. இதுவரை 14 லீக் போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான், 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 13 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வெளியேறியது. போட்டிகளில் தொடர் முழுவதும் சிரித்த முகத்துடன் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அணியின் சக உரிமையாளர் ஷில்பா ஷெட்டி தனது அணி தோல்வி அடைந்து, அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டதால் முதன் முதலாக கண்கலங்கினார்.
அதிரடியான பல வீரர்களை கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14போட்டிகளில் விளையாடி 7போட்டிகளில் வெற்றி கண்டது.14புள்ளிகளைப் பெற்றது.
தற்போது டில்லி, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. டெக்கான், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. டெக்கான், பெங்களூரு அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பை பெறும். இன்னொரு இடம் ரன்விகித அடிப்படையில் முடிவு செய்யப்படும். பஞ்சாப் அணியின் ரன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அனேகமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பெற முடியும்.
கிரிக்கெட்டில் முடிவுகள் இறுதி பந்து வரை.........

Tuesday, May 12, 2009

ஷேன் வோர்ன் காயம்.....சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ்.....



இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ஆரம்பத்தில் சரிவுகளை கண்டு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பின்னர் நடந்த போட்டிகளில் வெற்றிகளை சுவைத்து வந்தது. இனி வரும் போட்டிகளில் வெற்றியடைந்தால் மட்டுமே
சிக்கல் இல்லாமல் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்த நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டேன் என ஆஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.
டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அடுத்த போட்டிகளில் ஷேன் வோர்ன் விளையாடுவது சந்தேகம்.
கிம்பெர்லியில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற லீக் போட்டியில் டெக்கன் சார்ஜர்ஸிடம் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. அதற்கு முந்தைய ஆட்டத்திலும் தோல்வியுற்றது. இதனால் பட்டியலில் பின்னடைவு கண்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஷேன் வோர்ன் விலகியுள்ளதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியின் தலைவரான கிரேம் ஸ்மித், இனிவரும் போட்டிகளில் தலைவராக பணியாற்றலாம் எனத் தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைவராகவும் பயிற்சியாளராகவும் இருக்கும் ஷேன் வோர்னின் ராஜஸ்தான் ராயல்ஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா....

Sunday, May 10, 2009

அன்னையர் தினம்

உலகில் இன்று பலராலும் கொண்டாடப்படும் தினமாக அமைகிறது சர்வதேச அன்னையர் தினம். அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது. இதற்கு புராணங்களும் கதைகளும் சான்று பகர்கின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள், கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் - கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களா‌ல் வ‌ண‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகும்.

கிரேக்க மக்களும் ரியா என்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வத்தை முழுமுதல் தாய்க்கடவுளாக வணங்கி வழிபட்டு வந்தனர்.ரோமானியர்களும் தங்களது தாய்-கடவுளு‌க்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ந் தேதி மூன்று நாள் விழா நட‌த்‌தின‌ர்.

மத்திய- காலங்களில் வேறொரு வகையில் இது கொண்டாடப்பட்டது. குழந்தைகளும், பெண்களும் பொருள் ஈட்ட வெளியூருக்குச் செல்வதனால், ஒரே ஒரு விடுமுறை நாளில்தான் அவர்கள் தங்கள் தாய்மார்களைக் காண வாய்ப்பு கூடும். இந்த ஒரு தின விடுமுறையும் 40 நாள் நோன்பு விழாவின் நான்காவது ஞாயிறன்று என்று வழக்கமிருந்து வந்தது. இப்படித்தான் அ‌ன்னைய‌ர் ‌தின‌ம் என்ற ஒரு தினம் தொடங்கியது.

அன்னையர் தினம் என்ற தினத்தின் நிறுவனராக அமெரிக்காவை‌ச் சே‌ர்‌ந்த அனா ஜார்விஸ் என்ற பெண்மணியையே குறிப்பிட வேண்டும். இந்தப் பெண்மணி 1864ல் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவில் கிராஃப்டன் கிராமத்தில் பிறந்து வசித்து வந்தார்.அமெரிக்காவில் சிவில் யுத்தம் முடிவடைந்த நேரத்தில் அனா ஜார்விஸ்க்கு ஒரு வயது. அந்தக் காலகட்டத்தில் மேற்கு வேர்ஜினியாவில் குடும்பங்கள் இடையே பெரும் பகைமை இருந்து வந்தது. அனாவின் தாய் அன்னையர் தினம்' என்ற ஒன்று சில காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் கொண்டாடப்படும் என்று திரும்ப திரும்ப அனாவிடம் கூறியதாக தெரிகிறது.மேற்கு வேர்ஜினியாவில் குடும்பப் பகைமைகள் ஒழிய அன்னையர் தினம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் என அனாவிற்கு தோன்ற ஆரம்பித்தது.அனாவின் தாய் மரணமடைந்தபிறகு, அன்னா அன்னையர் தினம் ஒன்றை உருவாக்க உறுதிபூண்டார். அவரின் இந்த உறுதியை அறிந்து கிராஃப்டன் அமை‌ச்ச‌ர் மே 12 1907ல் அமெரிக்காவில் முதல் அன்னையர் தின சேவையை ஆரம்பித்து வைத்தார்.அதன் பிறகு தேசிய அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடுவதாக தீர்மானித்தனர். 1909 ல் எல்லா மாநிலங்களும் இந்த சிறப்புத்தினத்தை கொண்டாட தொடங்கியது. மே 9 1914ல் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் மே மாதம் இரண்டாம் ஞாயிறை எல்லா மாநிங்களுக்குமான அன்னையர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.அனா தொடர்ந்து இது குறித்து கடிதங்கள் எழுதியும் பிரசாரங்கள் செய்தும் வந்தார். பிறகு அனாவே அகில உலக அன்னையர் தின சங்கம் ஒன்றை நிறுவினார். 1948ல் அன்னா இறப்பதற்கு முன்னதாக இந்த தினம் உலகம் முழுவது‌ம் பரவியது. இதுதான் அன்னையர்தினம் பற்றிய ஒரு சுருக்கம். ம்ம் ......இது சுருக்கமா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.வரலாறு இதுதான். இப்படிப்பட்ட இந்த புனிதமான தினத்தில் அன்னையர் எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

Friday, May 8, 2009

செஸ் ஆஸ்கர் ஆனந்த் வசம் :: ::
ஒரு தனி மனிதராக தனது வெற்றிகளின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவில் செஸ் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் விஸ்வநாதன் ஆனந்த்.சாதனை வீரரான ஆனந்த் செஸ் ஆஸ்கர் விருதை ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.ரஷ்யாவின் செஸ் விளையாட்டு இதழான "64-செஸ் ரிவியூ' இதழ் 2008ம் ஆண்டுக்கான செஸ் ஆஸ்கார் விருதை அறிவித்தது. இந்த விருதை இம்முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். இதன்மூலம் இந்த விருதை ஆறாவது முறையாக (1997, 1998, 2003, 2004, 2007, 2008) கைப்பற்றி சாதித்தார். இவ்விருதை ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் அதிக பட்சமாக 11 முறை வென்றுள்ளார்.
பல விருதுகளை வென்று சாதனை படைக்கும் ஆனந்துக்கு இனிய வாழ்த்துக்கள்.
ஆனந்த் உங்கள் சாதனைப் பயணம் தொடரட்டும்.......
ஆட்ட நாயகன் மீது சந்தேகம் :
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிவரும் குஜராத் வீரர் அமித் சிங் இந்த ஐபிஎல் போட்டியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பந்துவீசும் இரண்டாவது வீரராகியுள்ளார்.இதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கம்ரன் கான் இதேபோன்ற குற்றச்சாட்டில் சிக்கிய முதல் வீரராவர்.
செஞ்சுரியனில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்தப் போட்டியில் 19ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் 27 வயதாகும் அமித் சிங்.அணியின் வெற்றிக்கு இவரது பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த போட்டியில் பணியாற்றிய நடுவர்கள் போட்டி விதிமுறைக்கு எதிராக அமித் சிங் பந்துவீச்சு அமைந்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகத்திடம் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் நடுவர்களின் கருத்தை ஐபிஎல் தெரிவித்துள்ளது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள அமித் சிங் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்து வீசும் முறை பரிசீலனையில்...முடிவு வரும் வரை போட்டிகளில் பங்கேற்கலாம்.....

Saturday, May 2, 2009

தமிழ்த் திரையுலகில் பாலாஜியின் பிரிவு......

தாநாயகனாக, வில்லனாக, குணசித்திர நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டிற்கு மேலாக நடித்தும், சிறந்த தயாரிப்பாளராகவும் திகழ்ந்த நடிகர் பாலாஜி இன்று சென்னையில் காலமானார்.
மணாளனே மங்கையின் பாக்கியம், சகோதரி, படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா, என் தம்பி, ஆண்டவன் கட்டளை, போலீஸ்காரன் மகள் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் பாலாஜி. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

பில்லா,பலே பாண்டியா,படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களில் பாலாஜியின் நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டது.எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றன. தெலுங்கு,ஹிந்தி மலையாள படங்களை மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர்.இவரது படங்களில் பெரும்பாலும் கதாநாயகனின் பெயர் ராஜா எனவும், கதாநாயகியின் பெயர் ராதா எனவும் சூட்டப்படும். இவரது திருமண நாளான ஜனவரி 26-ல் இவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் வெளியிடப்பட்டன.

கமல், ரஜினியை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை தந்தவர் பாலாஜி.
மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் இவர் விளங்கினார். ராஜா,நீதி போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இலங்கையின் மகாராஜா நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த "தீ" திரைப்படத்தில் பாலாஜியின் பங்கு சிறப்பாக அமைந்தது.

ராஜா சாண்டோ மற்றும் ஃபிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன.
மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகராகத் திகழும் மோகன் லால் இவருடைய மருமகனாவார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி அவர்கள் இன்று காலமானார்.
இவரது சில படங்களை பார்த்தவன் என்ற வகையில் இவரது நடிப்பில் உருவான காட்சிகள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இதை வாசிக்கும்போது உங்கள் மனதிற்குள்ளும் பாலாஜியின் நடிப்பில் உருவான சில காட்சிகள் அவரை ஞாபகப்படுத்தும்.
பாலாஜி நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நடிப்பில் உருவான திரைப்படக் காட்சிகள் நம் கண்களுக்குள்ளும் மனதிற்குள்ளும் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும்....... பாலாஜி அவர்களுக்கு இதய அஞ்சலிகள்.......

இந்திய ஹாக்கி எழுச்சி பெறுமா?

இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த ஜோஸ் பிராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு அதாவது 2011-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிவரை பயிற்சியாளராக பணியாற்றுவார்அதற்கடுத்த ஆண்டு லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பணியாற்றுவது குறித்து இப்போது சொல்ல முடியாது.இவரது பயிற்சியில் அணி சிறப்பாக வெற்றிகளைப் பெற்றால் சில நேரம் இவரது பயிற்சியாளர் பணி தொடரலாம் என்பது விளையாட்டு ஆர்வலன் அல்லது ரசிகன் என்ற வகையில் எனது கருத்து.உங்கள் கருத்தும் இப்படித்தானே...........

3 மாதத்துக்கு முன்னர் இந்திய ஒலிம்பிக் சங்கம் அவரை நேர்முகம் கண்டது. அப்போது தேவைகள் குறித்து அவரிடம் கேட்டறியப்பட்டன.
உதவியாளர்களாக 2 ஸ்பெயின் நாட்டினர் உட்பட 14 பேர்கொண்ட குழுவை கேட்டிருந்தார்.அணித் தேர்வு உட்பட அனைத்து விடயங்களிலும் தன்னிச்சையாக செயற்படுவது குறித்தும் கேட்டிருந்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனேகமாக அடுத்த வாரம் இந்தியா வந்து அவர் பொறுப்பை ஏற்கலாம்.
பிராசாவுக்கு மாதம் ஒன்றுக்கு நமது நாட்டு பண மதிப்பில் 15 லட்சம் ரூபாவுக்குமேல் சம்பளம் வழங்கப்பட உள்ளதாம்.....

இவரது பயிற்சியின் கீழ் இந்திய ஹாக்கி அணி அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு முன் எழுச்சி பெறுமா?

"பிராசா" இனி நீங்க" பண ராசா"

"அழகிய தமிழ் மகன்.....நூறில் ஒருவன்"

புகழ்பெற்ற டைம் பத்திரிகையின் உலகின் 100 முன்னணி பிரமுகர்கள் பட்டியலில் அமெரிக்கஅதிபர், தலைவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரிவினர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இந்தியாவிலிருந்து இரண்டுபிரமுகர்கள்களின் பெயர் இந்தப் பட்டியலில் உள்ளது. ஒருவர், சமீபத்தில் இரட்டை ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான். மற்றவர் இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி.
இசைப் புயலின் நாமம் இமயத்தையும் தாண்டி உலகமெங்கும் கலக்கிறது.
'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' இது ஏ.ஆர்.ரஹ்மானின் அழகிய தமிழ்...... இந்த இசை மைந்தனுக்கு இசை ரசிகர்களின் வாழ்த்துக்கள்.

Friday, May 1, 2009

உழைப்பாளர்கள் தினம்!
தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!
எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோ‌விய‌த் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றிலிருந்து 126 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம், 12 மணிநேரம், 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும், பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில், 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர். அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது. உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம், சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.
ஆனால், தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. 1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும், இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது. அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
உழைக்கும் உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.............
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates