அசத்தும் அனுபவம்...'''...
"டுவென்டி-20' என்றால் இளம் வீரர்களுக்கான களம் என்றும் டெஸ்ட் போட்டிகள் சிரேஷ்ட வீரர்களுக்கான ஆட்டம் என்றும் ஒரு எழுதப்படாத கருத்து நிலவி வருகிறது. இதற்கேற்ப கிரிக்கெட் அணிகள் "டுவென்டி-20' போட்டியில் இறங்கும் போது திடீரென புதிய முகங்களாக இறங்குவார்கள். கேட்டால் அவர்கள் தான் அதிரடியாக விளையாடுவார்களாம். யார் சொன்னது இப்படி. விளையாட்டுக்கு வயது தடையில்லை. நாங்களும் இதில் சாதிப்போம் என மிரட்டுகிறார்கள் உலக முன்னணி சிரேஷ்ட வீரர்கள். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது கட்ட "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இதுவரை நடந்துள்ள போட்டிகளை பார்த்தால் சச்சின், ஜெயசூர்யா, டிராவிட், கும்ளே, முரளிதரன், ஹைடன், கில்கிறிஸ்ட் மற்றும் வார்ன் என சிரேஷ்ட வீரர்களின் எழுச்சி நன்றாக தெரியும். "டாப் ஸ்கோரர்' வரிசையில் முதல் 6 இடத்தில் இருக்கும் வீரர்களில் 5 வீரர்கள் சிரேஷ்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் 16,684 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில்12,773 ரன்கள் குவித்து கிரிக்கெட் முதல்வனாக வருகிறார் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் "தி கிரேட்' சச்சின். 36 வயதை அடைந்துள்ள நிலையிலும் இவரது ரன் எடுக்கும் வேகம், தாகம் சற்றும் குறையவில்லை. சென்னை அணிக்கு எதிராக 59 (49 பந்துகள்), கோல்கட்டாவுடன் 68 (45 பந்துகள்) என தொடர்ந்து ரன்கள் குவித்து வருகிறார்.
ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஹைடன், கில்கிறிஸ்ட் இருவருக்கும் வயது 37. ஆனால் துடுப்பாட்டத்தில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளனர். இதில் ஹைடன், அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில். இவர் பெங்களூரு அணிக்கு எதிராக 35 பந்துகளில் 65 ரன்கள் குவித்து எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்கிறார். இதே அணிக்கு எதிரான டெக்கான் சார்ஜர்ஸ் தலைவர் கில்கிறிஸ்ட் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்துள்ளார்.
பெங்களூரு அணி கடந்த தொடரில் ஏமாற்றிய போதும் அணியின் அதிக ஓட்டங்கள் குவித்தவீரராக டிராவிட் ஜொலித்தார். இம்முறையும் முதல் 4 ஆட்டத்தில் 144 ஓட்டங்கள் குவித்து 6வது இடத்தில் உள்ளார். இதில் ராஜஸ்தானுக்கு எதிராக அடித்த 66 (48 பந்துகள்) ஓட்டங்களும் அடங்கும்.
பெங்களூரு அணிக்காக விளையாடும் முன்னாள் இந்திய வீரர் கும்ளே, தொடரின் முதல் போட்டியில் 5 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 5 ராஜஸ்தான் விக்கெட்டுகள் சாய்த்து, 38 வயதிலும் மிரட்டினார். இவர்களை தவிர 39 வயதில் ராஜஸ்தான் அணியின் வார்ன் பந்து வீச்சில் மட்டுமல்லாது தலைவராகவும்அசத்துகிறார். சென்னை அணியின் முரளிதரனும் சுழலில் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.
அனுபவ வீரர்களின் அதிரடி தொடருமா?